சாரல் 71 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 71 தன் எதிரில் அமர்ந்திருந்த தமக்கை மகனை அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பத்ரி. மேகலா இருந்த போதும் அவர் ரவியை ரசித்ததில்லை. சிறுவயதில் பரசுராமும் மேகலாவும் பிள்ளையை வேலையாளிடம் விட்டுவிட்டு வெளியூர்களுக்கு செல்வது தெரிந்தும் தன்னிடம் குழந்தையை விட்டுச் செல் என்று பத்ரி பொறுப்பெடுத்ததில்லை. அவளிடம் பணம் இருக்கிறது அவள் பிள்ளையை பார்த்துக்கொள்ள ஆள் வைத்திருக்கிறாள் என்று எண்ணி ஒதுங்கியே இருந்து கொண்டார். இத்தனைக்கும் அவரிடமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்வம் இருந்தது. ஆனால் ரகுராம் தனிமையில் வாடும் தம்பி மகனைக் கண்டு தானும் தன் மனையாளும் பிள்ளை இல்லாமல் தவிக்கும் நிலையில் அவரின் செயல் பிடிக்காமல் குழந்தையை தங்களுடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். பத்ரி ரவியை வளர்ந்த ஆண்மகனாக கண்டபோது உண்மையில் பூரித்துப் போனார். ஆனால் படித்து பட்டம் வாங்கியும் தந்தை தொழிலை கவனிக்காமல் அவன் ஊர் சுற்றுவதாக மேகலா வருந்தி சொன்னதைக் கேட்டதும் அவருக்கு அவன் மேல் நல்ல அபிமானம் வரவில்லை. இன்றும் தங்கையை அழைத்துக் கொண்டு சென்ற ரவி ஊரில் நிலம் வாங்கி ஏதோ செய்வதாக அவரின் மனைவி சில...